பதினொரு பொலிஸ் அதிகாரிகள் கைது! வெளியான பின்னணி

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் கடமையாற்றிய மேலும் 11 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்டுகள் அடங்குவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றிவளைப்பு தேடுதல்கள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்படும் ஹெரோயின் உட்பட போதைப் பொருட்களை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் பொலிஸார் மீண்டும் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அந்த பொலிஸ் பணியகத்தை சேர்ந்த நான்கு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மறைத்து வைத்திருந்தாக கூறப்படும் மூன்று கோடி ரூபாய் பணமும் அண்மையில் கைப்பற்றப்பட்டது. சிறையில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து நீண்டகாலமாக இவர்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.