பொதுத்தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளபோகும் புதிய மாற்றங்கள்!

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் அமைச்சரவையை நியமிக்கும் போது, இலங்கையின் அமைச்சரவையின் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு இணையாக ராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகளையும் வர்த்தமானியில் வெளியிடுவது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இதன் மூலம் ராஜாங்க அமைச்சர்களின் துறைகளில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எந்த வகையிலும் தலையிடவோ, கட்டுப்படுத்தவோ சந்தர்ப்பம் கிடைக்காது.

கடந்த முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஊடாக ராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகளை வர்த்தமானியில் வெளியிட ஜனாதிபதி முயற்சித்த நிலையில் அது வெற்றியளிக்காத காரணத்தினால், அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகளை சரியாக ஒதுக்க முன்வரவில்லை. ஒதுக்கப்பட்ட துறைக்கு தாம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் எனக் கூறி அவர்கள் தலையீடுகளை மேற்கொண்டதால், பல நிர்வாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் போது தற்போது சிதறிக் கிடக்கும் துறைகளை ஒன்றாக இணைந்து பல அமைச்சுக்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக கல்வி, உயர்கல்வி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி ஆகிய துறைகள் ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும்.

இதனுடாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் துறைகளில் இருக்கும் பிரிவுகள் பல ராஜாங்க அமைச்சர்களுக்கு பகிரப்பட உள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.