யாழ் பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்கும் படி நடந்தவரை நடு வீதியில் புரட்டியெடுத்த யுவதி

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் மதியம் 2 மணியளவில் இளம் யுவதியொருவரிடம் ரேட் என்ன கேட்ட நபரை நடு வீதியில் வைத்து யுவதியொருவர் நையப்புடைத்துள்ளார்.

மத்திய பேருந்து நிலையத்தின் ஓரமாக அமைந்துள்ள பத்திரிகை விற்பனை நிலையத்திற்கு அண்மையாக சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளம் யுவதியொருவர் வீதியோரமாக காத்திருந்தார்.

தனியார் பேருந்துகளிற்காகவும் அந்த இடத்தில் பயணிகள் காத்திருப்பது வழக்கம்.

இந்த நிலையில், பேருந்து நிலையத்திற்குள் நடமாடும் அதிர்ஸ்டலாப சீட்டு விற்கும் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர், யுவதியை அவதானித்துள்ளார்.

யுவதி சற்று நேரம் அவ்விடத்தில் நிற்பதை அவதானித்தவர், யுவதிக்கு அருகில் சென்று ஆபாசமாக எதையோ வினவியுள்ளார்.

அவரை யுவதி முறைத்து பார்த்ததை அந்த பகுதியில் நின்றவர்கள் அவதானித்துள்ளனர். இருந்தாலும், கோபம்தான் காதலில் முடியுமென நினைத்தாரோ என்னவோ, ஆசாமி சற்று கழித்து யுவதிக்கு அருகில் சென்று, “உங்களின் ரேட் என்ன?“ என கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த யுவதி, ஆசாமியின் சட்டையை பிடித்து சரமாரியாக தாக்கினார். யுவதியின் இடி போன்ற அடிகளை தாங்க முடியாமல் ஆசாமி நிலத்தில் விழுந்தபோதும், யுவதி விடவில்லை.

உருட்டி உருட்டி தாக்கியதுமல்லாமல், பிரதான வீதியிலிருந்து இழுத்து சென்று, வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள ஓடையான பகுதிக்குள் வைத்து எஞ்சிய அர்ச்சனையை கொடுத்தார்.

அத்துடன், ஆசாமியை பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துக் கொண்டே செல்ல முயன்றார்.

எனினும், அங்கிருந்தவர்கள் யுவதியை சமரசம் செய்து, ஆசாமிக்கு அவர்களும் சில “தட்டு தட்டி“ பிரச்சனையை முடித்து வைத்தனர்.

பொது இடங்களில் பெண்களிற்கு எதிரான அத்துமீறல்கள் மிக அதிகரித்துள்ள நிலையில், யுவதியின் செயற்பாட்டை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

யாழ் நகரத்தில் மாணவிகள், பணியாளர்கள் என இளம் யுவதிகள் தனியாக செல்லும்போது, ஆபாசமாக பேசும் போக்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.