அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட பாரிய பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்டெடுக்க ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய தமிழ் பேராசிரியரான பத்மஸ்ரீ நடராஜ் செட்டியாருக்கு “சிறந்த குடியேறி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த 10 பொருளாதார மேதைகளில் ஒருவராகக் கருதப்படும் டாக்டர் ராஜ் செட்டிக்கு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து அமெரிக்காவை மீட்பதற்கான வழிமுறைகளைக் கூறியதற்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கோர்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் இந்த விருது அமெரிக்க சுதந்திர தினத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான இவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள புதுவயலைப் பூர்விகமாகக் கொண்டவர்.

இவரது தந்தையாரான கருப்பன் செட்டி டெல்லியில் புள்ளியியல் துறையில் பணியாற்றியவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பொருளாதார ஆலோசகராகவும் இருந்தவர்.

கருப்பன் செட்டியின் மனைவி அன்புக்கிளி ஆச்சி காரைக்குடியில் பிறந்தவர். செட்டியார் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர் என்ற புகழுக்கு சொந்தக்காரர். டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவராக பணியாற்றியவர்.

ராஜ் செட்டி தனது ஆரம்பக் கல்வியை டெல்லியில் முடித்து பின் தனது 08 வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.

அங்கே கல்லூரிப் படிப்பை முடித்து 23ஆவது வயதில் பெர்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தனது 28 ஆம் வயதில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியராக தன்னை உயர்த்திக் கொண்ட ராஜ் செட்டி, இளம் வயதில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். இவரது மனைவி சுந்தரி ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு 05 இலட்சம் டொலர் ஜீனியஸ் கிராண்ட், 2013இல் பேபி நோபல் பரிசு என அழைக்கப்படும் John Bates Clark Medal, 2015இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ராஜ் செட்டி அமெரிக்காவின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.