கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

கட்டாரில் இலங்கை குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் உயிரிழந்த மூவரினதும் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

59 வயதுடைய தந்தையும், 55 வயதுடைய தாயும் 34 வயதுடைய மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் சடலம் இன்று காலை ஸ்ரீலங்கன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

களனி பகுதியில் வசிக்கும் குடும்பமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

59 வயதான மகேந்திரராஜ் லோகிதாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் சென்றுள்ளார். இந்நிலையில், கத்தாரில் இலங்கை இளைஞரை உயிரிழந்த 34 வயதான பெண் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கண்டியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மார்ச் முதலாம் திகதி உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது காதலருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்த நபர் தனது காதலி, அவரது தாய் மற்றும் தந்தையை கொலை செய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த நபர் நாடு திரும்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சுமார் நான்கு நாட்களுக்கு பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டன, மேலும் கொரோனா தொற்று நோய் காரணமாக சடலங்கள் இலங்கைக்கு கொண்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் மகள் தனது சகோதரியின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க விமான நிலைய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.