காய்ச்சலினால் திடீரென உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்றா? மருத்துவ அறிக்கை வெளியானது

சிலாபத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்றவில்லை என அவருக்கு மேற்கொள்ளப்பட்ட விசேட வைத்திய பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

குறித்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட வைத்திய பரிசோதனையின் பின்னர் வெளியாகிய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்ததாக சிலாபம் மாவட்ட வைத்தியசாலை இயக்குனர் கபில மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.

மாரவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய திருமணமான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர் முந்தலம் பிரதேசத்தில் உள்ள தனத தாயின் வீட்டிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் காய்ச்சல் ஏற்பட்டு வைத்திய சிகிச்சை பெறுவதற்காக கடந்த 10ஆம் திகதி முந்தலம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் முந்தலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் ஆபத்தான நிலையில் இருந்தமையினால் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும் அவருக்கு கொரோனா தொற்றவில்லை என வைத்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எனினும் கொரோனா சட்டத்திற்கமைய அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.