உடன் அமுலாகும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை நிறுத்த உத்தரவு !

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து பிரச்சார கூட்டங்களையும் ரத்துச் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரச்சார கூட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்துவத்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தினங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்த அனைத்து பிரச்சார கூட்டங்களையும் கைவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு மேலதிகமாக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து சந்திப்புகள் மற்றும் சிறிய கூட்டங்கள் அனைத்தையும் மட்டுப்படுத்துமாறும் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கூட்டங்கள் நடத்தினால் அதனை கடுமையாக சுகாதார ஆலோசனைகளின் கீழ் மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பிரச்சார கூட்டங்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.