நாட்டு மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அவசர அறிவுறுத்தல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் மக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இலங்கை மருந்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று, கடந்த மார்ச் மாதமளவில் நாட்டில் பரவ ஆரம்பித்தபோது, உடனடியாக பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும் மீண்டும் இம்மாத ஆரம்பத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது, கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல், இராஜாங்கனைப்பகுதி ஆகியவற்றில் பெருமளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவைகளை அவதானிக்கின்றப்போது, நாட்டில் வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே அநாவசியமாக வெளியே செல்வதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது எதிர்வரும் வாரங்களில் நீங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதாயின் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திந்து செயற்படுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.