யாழ்.கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது இரும்புப் பெட்டியில் இருந்த மர்ம பொருள்கள்!

கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டதையடுத்து நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கைக்குண்டுகள் சிறப்பு அதிரடிப் படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் , இன்று காலை வீடொன்றை சுத்தம் செய்த போது, அந்த வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்குள் வெடிபொருள்கள் இருப்பதை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்ததுடன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் வெடிப்பொருட்களை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் இன்று மாலை வெடிப்பொருட்கள் அடங்கிய பெட்டியை அங்கிருந்து அகற்றியதுடன் அதற்குள்ளிருந்த 17 கைக்குண்டுகளும் செயலிழக்கம் செய்யப்பட்டன.