ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போதைய அரசியல்வாதிகளினால் திருட்டுதனமாக திறப்பு விழா செய்யப்படுவதாக விஜயகலா மகேஸ்வரன் குற்றச்சாட்டு

எமது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களினை தற்போதைய வேட்பாளர்கள்தேர்தல் சட்டத்திற்கு முரணாக திறப்புவிழா செய்துவருவதாக முன்னைநாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோப்பாயில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் தேர்தல் சட்டத்தினை மீறி செயல்படும் சில வேட்பாளர்களுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாகவும் இதனை அதிகாரிகள் தடுக்க முற்படும் போது அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்தார்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் மக்கள் ஜனநாயகமாகவும் சுதந்திரமாகவும் நடமாடக் கூடிய சூழல் உருவாகியது எனினும் மீண்டும் இராணுவ ஆட்சிக்குள் மக்கள் முடக்கப்படுவதை காணக் கூடியதாக உள்ளது வடக்கில் யுத்தகாலத்தினைப்போல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் சோதனையிடப்படுகின்றார்கள் இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.