என் சாவுக்கு காரணம் பேய் தான்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த இளம்பெண்..!

என் சாவுக்கு காரணம் பேய் தான் என இளம்பெண் ஒரு கடிதம் எழுதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கோபி. கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மூத்த மகளான லத்திகா என்பவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். தற்போது கொரோனா காரணமாக விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய லத்திகா அதன்பின் எவரிடமும் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வேடசந்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் அவரது அறையில் ஒரு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் லத்திகா பென்சில் மூலமாக தனது தற்கொலைக்கு காரணம் பேய் என்று எழுதியிருந்தார்.

மேலும், அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: “அப்பா, அம்மா யாரோ என்னை பயமுறுத்துராங்க. அப்பா நைட்டு தூக்கம் இல்லை. என்ன சாக வானு கூப்பிடுறாங்க. இதை சொன்னா எல்லாரையும் கொல்லுவேன் என்று சொல்லுது அந்த பேய்.

என்ன சாக கூப்பிடுது என்னை ஏதாவது பண்ண சொல்லுதுபா இல்லைனா நம்ம குடும்பத்தை அழிப்பேன்னு சொல்லுதுபா. யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க என்னோட பொருள் நான் பயன்படுத்திய எதுவும் தயவு செய்து வீட்டில் வைக்க வேண்டாம்.

எல்லாம் நன்மைக்கே தம்பி தங்கச்சி நீங்க அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க. லவ் யூ மை ஃபேமிலி’ என்று அந்த கடிதத்தில் லத்திகா எழுதி வைத்துள்ளார்.

இக்கடிதத்தை கைப்பற்றிய போலீசார் கடிதத்தில் எழுதி இருப்பதின் உண்மை தன்மை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லத்திகா பயன்படுத்திய செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.