பொது சுகாதார பரிசோதகர்களின் உதவி இன்றி சுகாதார வழிக்காட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் தொடர்பான ஆபத்து காணப்படும் சந்தர்ப்பத்தில் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய செயற்படுவதா இல்லையா என்பதை சுகாதார பரிசோதகர்கள் மூலம் மாத்திரமே ஆராய்ந்து பார்க்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொது மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவதை தடுக்கவே பொதுத் தேர்தல் சம்பந்தமான சுகாதார வழிக்காட்டல்களை வர்த்தமானியில் வெளியிடும் போது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரங்கள் வழங்கவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியிருந்ததை கண்டித்து, பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த 17 ஆம் திகதி மதியம் 12.30 மணி முதல் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகிக்கொண்டனர்.
இது சம்பந்தமாக சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வரை சாதகமான பதில் எதனையும் வழங்காத காரணத்தினால், இன்று முதல் அனைத்து தொற்று நோய் கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து அவர்கள் விலக தீர்மானித்துள்ளனர்.