ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பீடமேறினாலே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியம் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பீடமேறினால் மட்டுமே தமிழ் மக்களுக்குரிய தீர்வு சாத்தியமாகுமென முன்னாள்கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்

சாவகச்சேரியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ரணில் பிரதமராக இருந்த காலத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.

அதுபோல கடந்த 2015 ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் தான் தமிழ் மக்களுக்கான அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

எந்த ஒரு ஆட்சி காலத்திலும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில் எந்த அரசாங்கமும் அக்கறை எடுக்காத நிலையில் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் காலத்தில் தான் தமிழ் மக்களுக்குரிய தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் நாட்டில் ஏற்பட்ட சில குழப்பமான அரசியல் சூழ்நிலை காரணமாகவே அனைத்தும் தடைப்பட்டிருந்தது எனினும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி பீடமேறினால் தான் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.