வடக்கில் புதிய ஆளுநர் விரைவில்!! புதியவர் யார் தெரியுமா??

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமனத்தின் பின் இந்த நியமனத்தை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதியாகவும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான அதிகாரியுமாகவும் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கடமையாற்றியிருந்தார்.

தொடர்ந்து இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தலைமை பிரதாணியாகவும் கடமையாற்றிய அவர், இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக அவர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

மகாவலி, நீர்பாசம் மற்றும் விவசாய அமைச்சர் சமால் ராஜபக்ச, நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வடமராட்சி களப்பிலிருந்து குடாநாட்டுக்கான குடிதண்ணீர் விநியோகத்திட்டத்தின் ஆரம்ப பணிகளை பார்வையிட்டார். அவருடன் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வருகை தந்திருந்தார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸுக்கு இராஜதந்திர பதவி நிலை வழங்குவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.