நல்லூர் திருவிழா தொடர்பில் பொதுமக்களிற்கு முக்கிய அறிவித்தல்

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆலய உற்சவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நாளை நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக இருக்கின்றது . யாழ். மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு பேணப்பட்டுவரும் நிலையில் இந்த நிலைமையைத் தொடர வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில் யாழ். குடாநாட்டில் நிறைய ஆலயங்களில் திருவிழாக்கள் வழமைபோல் இடம்பெற்று வருகின்றன. அதேபோலத்தான் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பமாகி ஓகஸ்ற் மாதம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், திருவிழாவை முன்னிட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் யாழ்ப்பாண மாநகரசபை, ஏனைய திணைக்களங்கள், பொலிஸ், இராணுவத்துடன் இணைந்து நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

அவையனைத்தும் தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போது பக்தர்களுடைய வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமையாக நல்லூர் ஆலய உற்சவத்திற்கு இலங்கையிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். அதாவது இலட்சக் கணக்கில் மக்கள் கலந்துகொள்ளும் ஒரு திருவிழாவாக நல்லூர் ஆலயத் திருவிழா காணப்படுகின்றது.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாட்டுடன் உற்சவத்தினை நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

வழமைபோன்று இன்று தொடக்கம் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கடைகள், வியாபார நிலையங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அன்னதானம் காவடி மற்றும் பக்தர்களின் வழிபாட்டு முறைகள் சிலவற்றிற்கும் இம்முறை தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், நல்லூர் ஆலய உற்சவத்தினை சிறப்பாக மேற்கொள்வதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமாகின்றது.

ஆலயத்திற்கு உள்ளும் வெளியிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களின் வருகையினை எதிர்பார்க்கின்றோம்.

எனவே, வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் இந்த ஆலயத் திருவிழாவின்போது சமூகத்தொற்று ஏற்படாதவண்ணம் ஆலய உற்சவத்தில் மக்கள் கலந்து கொள்வதன் மூலமாகவே நல்லூர் ஆலய உற்சவத்தினை தொடர்ச்சியாக 25 நாட்களும் எந்தவித தடையுமின்றி நடத்த முடியும்.

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸாரின் செயற்பாட்டிற்கு தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை கட்டாயம் வழங்க வேண்டும். ஏனென்றால் அவர்களால் சில பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனையும் மக்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் ஆலய உற்சவத்தினை தொலைக்காட்சி வழியாக வீடுகளிலிருந்து பார்க்க முடியும். அதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண நகரம் சனநெரிசல் கூடிய ஒரு பிரதேசம். அதேநேரத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேசம். இந்த ஆலய உற்சவத்தின்மூலம் கொரோனா தொற்று ஏற்படாமலும் அதனைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எம் அனைவரையும் சார்ந்ததே. எனவே இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்” என்றார்.