தப்பிச்சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான தகவல்! கொழும்பின் முக்கிய இடத்திற்கும் சென்றுள்ளார்

கொழும்பு IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றிருந்தார்

போதைப்பொருளுக்கு அடிமை மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபராக இவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எல்.சியாம் நசீம் என்ற 41 வயதுடைய இந்த நபர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும், சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 119 என்ற இலக்கத்திற்கு அல்லது 071 – 8 591 017, 071- 8 592 290, 071 – 8 591 864 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியிருந்தனர்.

இந்த நிலையிலேயே அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவரை மீண்டும் IDH மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று அதிகாலை 2 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையில் முதலில் கொழும்பின் முக்கிய பகுதியான கோட்டைக்கு சென்றுள்ளதாக மேல் மாகாண சிரேஸ் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டை, பிரதான வீதியில் இருந்து முச்சக்கரவண்டி ஒன்றின் மூலமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவர் வந்துள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த நபர் பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.