கொழும்பில் பல இடங்களில் சுற்றித்திரிந்த கொரோனா நோயாளி! வெளியானது சிசிடிவி காணொளி

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கொழும்பின் பல இடங்களுக்கும் சென்றுள்ளமை சிசிடிவி காணொளிகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் வீடொன்றினுள் நுழைந்து அங்கிருந்த ஆடைகளையும் சைக்கிள் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த நபர் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹல்கஹதெனிய மண்டவில வீதியில் பயணித்துள்ளார்.

அதிகாலை 2.23 மணி அளவில் கட்டை காற்சட்டையும் மேற்சட்டை ஒன்றும் அணிந்து குறித்த நபர் பாதையில் பயணிப்பது சிசிடிவி காணொளியில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த நபர் வீடு ஒன்றுக்கு அருகில் நின்று தனது பாதணிகளை கையில் எடுத்து மீண்டும் அப்பாதையில் திரும்பி வந்துள்ளார். பின்னர் அதிகாலை 2.25 மணி அளவில் அவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் அதிகாலை 2.45 மணியளவில் அவ்வீட்டின் இடதுபுறம் உள்ள வீதியினூடாக பிரதான பாதைக்கு வரும் குறித்த நபர் நீண்ட காற்சட்டை மற்றும் வேறொரு மேற்சட்டை ஒன்றை அணிந்திருந்துள்ளார்.

அதன் அடிப்படையில் குறித்த நபர் வீட்டினுள் 20 நிமிடங்கள் தங்கியிருந்துள்ளார்.

குறித்த வீட்டின் கூரையின் மேல் இருந்து குறித்த நபர் அணிந்திருந்த கட்டை காற்சட்டை மற்றும் மேற்சட்டையையும் அந்த வீட்டினர் இன்று அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த ஆடை தீக்கிரையாக்கப்பட்டதுடன், வீடு முழுவதும் கிருமிநாசினி தொற்று நீக்கப்பட்டிருந்தது.

சைக்கிளை திருடிச் செல்லும் நபர் நேற்று 3.21 மணி அளவில் அங்கொன சந்தியின் ஊடாகப் பயணித்து உள்ளமை அங்கு இருந்த சிசிடிவி காணொளிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.