பாரிஸ்- லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்.இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் யாழ்ப்பாணம்- தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (43வயது) என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் வீட்டு வாடகை தொடர்பில் வீட்டு உரிமையாளருடன் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை வீட்டு உரிமையாளரின் நண்பர்கள் சிலரால் அவர் தாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காயங்களுடன் வீதியில் நின்ற அவரை, பொலிஸார் பொறுப்பேற்று, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன்பின்னர் குறித்த நபரின் சடலம் வியாழக்கிழமை அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாக வீட்டு உரிமையாளரால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் குடியிருந்த வீடு உரிமையாளரால் பூட்டப்பட்டிருந்த நிலையில் எவ்வாறு மீண்டும் வீட்டுக்குச் சென்றார் என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்கள் எவரும் பிரான்ஸில் இல்லை எனவும், அவரது மனைவி இலங்கையில் வசிப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.