கொரோனாவில் மீண்டு வந்த அரசு ஊழியர்… மனைவி செய்த காரியத்தால் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியிலிருந்தவர் துரை(52). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை எடுத்து வர மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் சென்னை சென்று திரும்பி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து துரைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 26ம் திகதி குணமாகி வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால் மனைவி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதால் மன உளைச்சலில் தனிமையில் இருந்து வந்துள்ளார். மனைவியை வீட்டிற்கு அழைத்தும் அவர் வர மறுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அவர் இன்று வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பொலிசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.