சங்கிலி பறிப்பு முயற்சி: பெண் வீழ்ந்து காயம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்றதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் கோப்பாய் – கைதடிப் பாலத்துக்கு அண்மையாக இடம்பெற்றது.

வனவளத் திணைக்களத்தின் வன்னிப் பிரதேச அலுவலத்தில் பணியாற்றும் பெண் ஒருவரே காயமடைந்தார்.

சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது:

நேற்றுக் காலை குறித்த பெண் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.

இதன்போது அப்பெண் அவர்களின் கையைத் தட்டிவிடவே சமநிலை தவறி அப்பெண் கீழே விழுந்து காயங்களுக்கு உள்ளானார். கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபின் அப்பெண் வீடு திரும்பினார்.

இப்பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறான நகை பறிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அப்பகுதியில் நிற்கும் சிலரே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்குது.