பிரிந்து வாழும் மனைவியை தேடிச் சென்று சித்திரவதை செய்து கத்தியால் குத்திய கணவர் – குப்பிளானில் சம்பவம்

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் இன்று முற்பகல் குப்பிளான் பகுதியில் இடம்பெற்றது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தார்.

ஊரெழுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 34 வயதுடைய குடும்பப் பெண், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் குப்பிளான் பகுதியில் வீடொன்றில் முதியவரை பராமரிக்கும் வேலையில் வாழ்வாதாரத்துக்காக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பணி புரியும் வீட்டில் முதியவர் சுன்னாகம் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அந்தப் பெண் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அதன்போது அங்கு சென்ற கணவர், மனைவியின் தலைமுடியை வெட்டி எறிந்து அவரின் முகத்தில் கத்தியால் கீறி சித்திரவதை செய்துள்ளார். அத்தோடு கத்தியால் வெட்டியும் உள்ளார்.

சம்பவத்தில் குடும்பப் பெண் அதிகளவு குருதி வெளியேறி அவதிப்பட்ட நிலையில் அயலவர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், அந்தப் பெண்ணை வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் அவரது கணவரைக் கைது செய்து தடுத்துவைத்துள்ளனர்.