யாழ்.ஏழாலையில் திடீரென உயிரிழந்த மாணவி… பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

சிறுநீரக செயலிழப்பால் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் தரம்-11 இல் கல்வி கற்று வந்த மாணவியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் லக்சிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சிறுநீரகம் செயலிழந்த நிலையில் அடுத்த மாதம் குறித்த மாணவிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதெனத் திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மாணவிக்கு கடந்த சனிக்கிழமை திடீரென இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவிக்கு இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால், மாணவிக்கு மூளை நரம்பு வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்படி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றது.

இதேவேளை, கல்வியில் மிகவும் திறமை வாய்ந்த லக்சிகாவின் திடீர் மரணம் ஏழாலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.