யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதலுக்கு தயாராக இருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் குழுவொன்று கூடியுள்ளதாக அப்பகுதி பொது மக்கள் நேற்றிரவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்திற்கு சென்று பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டபோது குறித்த இளைஞர் குழு அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த குழுவை சேர்ந்த இரு இளைஞர்களை பொலிஸார் துரத்திப் பிடித்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த இருவரே இவ்வாறு வசமாக சிக்கியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள், கூரிய ஆயுதங்கள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளனதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.