பெற்ற மகளை பார்க்க சென்ற தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி!!

மாதம்ப பகுதியில் மகள் ஒருவரினால் தாய் மன ரீதியாக துன்புறுத்தப்பட்ட மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெசாக் தினத்தன்று தனது மகளின் வீட்டிற்கு சென்ற தாயை துரத்திவிட்டு தனது குடும்பத்துடன் வெசாக் பார்க்க மகள் சென்றுள்ளார்.

ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள வறுமையான கிராமத்தில் வாழும் இந்த வயோதிப தாய் தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக மாதம்பேயில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மகளினால் தாய் விட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட இந்த தாய் சந்தித்த அனுபவத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
“எனது கணவர் உயிரிழந்து விட்டார். எனக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகன் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நான் மகள் மற்றும் பேரப்பிள்ளையை பார்ப்பதற்காக மாதம்ப பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு சென்றேன். என்னை வீட்டிற்குள் மகள் அழைக்கவில்லை. உங்களுக்கு உணவு வழங்கி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் வீட்டையும் காணியையும் விற்று பணம் கொண்டு வருமாறு மகள் கோரியுள்ளார்.

நான் வசிக்கும் வீட்டையும் இடத்தையும் விற்பனை செய்து பணம் தருமாறு மகள் தொடர்ந்து எனக்கு தொந்தரவு செய்கின்றார். அன்றும் என்னை திட்டினார். தொண்டை வறண்ட நிலையில் இருந்தேன். எனினும் குடிப்பதற்கு ஒரு துளி நீர் தரவில்லை. பின்னர் மகளும் மருமகனும் தங்கள் பிள்ளைகளுடன் லொரி ஒன்றில் ஏரி வெசாக் பார்க்க சென்று விட்டனர். அதுவரையில் நான் கடுமையான பசியில் இருந்தேன். அருகில் உள்ள வீட்டிற்கு சென்று சம்பவத்தை கூறினேன். அந்த வீட்டில் உள்ளவர் எனக்கு வயிறு நிறைய உணவு வழங்கினார்.

என்னை எந்த பிள்ளைகளும் பார்ப்பதில்லை. நான் கீரை விற்று பணம் தேடி சாப்பிடுகின்றேன். எனது மகளும் மருமகனும் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நான் வீட்டை வித்து கொடுத்தாலும் சூதாடுவதற்கே பயன்படுத்துவார்கள். நான் வாழும் வரை அந்த வீட்டை விற்பனை செய்து பணம் வழங்க மாட்டேன். நான் மரணித்த பின்னர் விரும்பியதை செய்யட்டும். வேலை செய்யும் அளவு எனது உடலில் சக்தி இல்லை என வயோதிப தாய் குறிப்பிட்டுள்ளார்.