எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 5 துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் – ஜனாதிபதி

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமான விடயத்தில் விசேடமாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த 5 துறைகளை சரியான முறையில் நடத்திச் செல்வதற்காக முக்கியத்துவத்தை கொடுத்தே அடுத்த வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது, காணியற்ற மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவது, மாகாண சுகாதார சேவைகளை முன்னேற்றுவது, மாகாண கல்வி சேவைகளை திட்டமிட்டு அபிவிருத்தி செய்வது, போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக்குழுக்களை ஒழித்தல் என்பனவே ஜனாதிபதி அடையாளம் கண்டுள்ள 5 துறைகளாகும்.

இந்த துறைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து கலந்துரையாடி பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த முக்கியமான துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.