கல்முனை வைத்தியசாலையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு! ஐவர் கைது

கல்முனை ஆதார வைத்தியசாலையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் , உறவினர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீதியை பெற்றுதர கோரியும் வைத்தியரின் அசமந்த நிலையையும் கூறி அமைதியின்மையை ஏற்படுத்தினர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நேற்றையதினம் வெல்லாவெளி பாக்கியல்ல சின்னவத்தை பகுதியை சேர்ந்த 34 வயதான மாசிலாமணி சிவராணி குழந்தை பேறுக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.தொடர்ந்து குழந்தையை பிரசவித்த தாய்க்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறையினை அடுத்து மீண்டும் அவருக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்நிலையில் சிகிச்சையினால் தான் தாய் இறந்ததாகவும் உறவினர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இதனை தொடரந்து வைத்தியசாலையின் முன்னால் அமைதியின்மை நிலையினை ஏற்படுத்தியதாக 5 பேர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.