உயிருடன் இருக்கும் மாணவியின் படத்தை பயன்படுத்தி மரண அறிவித்தலை தயாரித்த நபர்களை தேடும் பொலிஸார்

16 வயதான பாடசாலை மாணவியின் புகைப்படத்தை பயன்படுத்தி மரண அறிவித்தலை தயாரித்து, பொது இடங்களில் ஒட்டிய நபர்களை கைது செய்ய மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மின்னேரிய பொலிஸ் பிரிவில் ஜெயந்திபுர,தெஹெம்கம பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த மாணவியின் புகைப்படத்தை பயன்படுத்தி, மரண அறிவித்தல் என தலைப்பிட்டு பிறப்பு மற்றும் இறப்பு திகதிகளை குறிப்பிட்டு அந்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

ஏ 4 கடதாசியில் அச்சிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், தம்பவல என்ற பிரதேசத்தில் இருந்து மாணவி பயிலும் ஜெயந்திர பாடசாலை வரையில் உள்ள மின் கம்பங்களில் ஒட்டப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த செயலை செய்த நபர்களை கண்டுபிடிக்க மின்னேரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.சீ. ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.