வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

காலி மாவட்டத்தின் உடுகம தேர்தல் மத்திய நிலையத்திற்கு வாக்கு பெட்டிகளை கொண்டு சென்ற பேருந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் 2020இற்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய தினம் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து காலி – உடுகம வீதியின் ஹியார் பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், முச்சக்கரவண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.