தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பெயர் உறுதியானது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்கின்ற சிக்கல் எழுந்திருந்தது.

இந்த நிலையில் அதனை தீர்த்து வைக்கும் முகமாக நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை திருகோணமலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவரும், வட மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம், தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராசசிங்கம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் போன்றவர்களும் இணைந்திருந்ததாக திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் பலரது கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் தோல்வியுற்ற போது கட்சியின் மூத்த தலைவருக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டமையும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சூழ்நிலையில் நீண்ட வரலாற்றை உடைய, தமிழரசு கட்சியின் அடையாளமாகவும் உள்ள மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு தேசிய பட்டியலை வழங்குவதென ஒருமித்து முடிவெடுக்கப்பட்டதாக கட்சியின் மூத்த நிர்வாகியொருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்கள் பல கடந்த காலங்களில் நிகழ்ந்த போதெல்லாம் ஒருமித்து முடிவெடுத்து கட்சியை வெற்றி பாதைக்கு இட்டு சென்றுள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ளது கட்சியின் தோல்வியல்ல, தற்காலிக பின்னடைவு.

இதற்கு சகலரும் பொறுப்பேற்று கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் அந்த மூத்த நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய பட்டியல் ஊடாக நியமிக்கப்படும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு அம்பாறை மாவட்டமே முழுமையாக பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.