அடுத்தடுத்து ரத்துச் செய்யப்படவுள்ள சட்ட திருத்தங்கள்? சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்

தற்போது ஸ்ரீலங்கா அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தென்னிலங்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன் அடிப்படையில், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் 19 மற்றும் 18 வது திருத்தச் சட்டங்களை இரத்துச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது.

எனினும் பின்னர் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைக்கப்பட்டன. 19வது திருத்தச் சட்டத்தை கொண்ட வர நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பின்னர் இது குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக அரசியலில் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டதாகவும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் தேவையற்ற மோதல்களை இந்த திருத்தச் சட்டம் ஏற்படுத்தியதாகவும் கடந்த காலங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

அதேவேளை 18வது திருத்தச் சட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதுடன் அதில் ஒருவர் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகிக்கும் கால எல்லை நீக்கப்பட்டது. அத்துடன் பொலிஸ் மற்றும் ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பதவிக்கால வரையறை நீக்கப்பட்டமைக்கு நாட்டிற்குள் பல எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.

இந்த இரண்டு அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் வரை 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் என கூறப்படுகிறது.