வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட உத்தரவு!

வடக்கு மாகாணத்தில் உள்ள அத்தனை வர்த்த நிலையங்களையும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக இரவு பத்து மணிவரையில் திறந்து வைத்திருக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

அத்துடன், உரிய போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எனக்குக் கிடைத்த தகவலின்படி தற்போது வட மாகாணத்தின் நகரங்களிலுள்ள கடைகளெல்லாம் மாலை 6 அல்லது 7 மணிக்கு பூட்டப்பட்டு பொது மக்களின் நடமாற்றம் குறைந்து போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்த நிலைக்கு வருவதாக நானறிகின்றேன்.

எனவே, தற்போது நாட்டிலே இயல்பு நிலை காணப்படுவதாலும் எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெறாவில்லை.

எனவே வர்த்தக சங்கங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஆகியோருடன் நான் நடத்திய கலந்துரையாடலுக்கமைவாக வட மாகாணத்தின் நகரங்களிலுள்ள கடைகள் அனைத்தும் இரவு 10 மணிவரை முழுமையாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன்.

எனவே, கடைகள் அனைத்தும் திறந்திருப்பதோடு பொது மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கக்கூடிய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.

இதை சகல உள்ளுராட்சி சபைகளும் நகர சபைகளும் முன்னெடுப்பதோடு இதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தித்தருமாறு அரச மற்றும் தனியார் போக்குவரத்து சபைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதனுடன் அதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன்.

எனவே, வட மாகாணத்திலுள்ள அத்தனை நகரங்களும் பொது மக்களுக்காக இரவு 10 மணி வரை தமது சேவைகளை வழங்குவதை முன்னெடுக்க வேண்டுமென்று சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.