பதவியை கைவிடும் மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியை கைவிடத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.

கட்சியின் முன்னேற்றத்திற்காக பதவியை துறக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீரென தமது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த 16 முன்னாள் அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் ஆகியோரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, அதிருப்தி குழுவினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போதே கட்சியின் தலைமைப் பதவியில் இருந்த தான் விலகிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சமகால அரசியல் தளம் ஸ்திரமன்ற நிலையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தப்பட்ட தேசிய அரசாங்கம் பல்வேறு முரண்பாடுகளுடன் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த அதிரடி அறிவிப்பு, கொழும்பு அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.