நாட்டின் அனைத்து வீதிகளும் 4 ஆண்டுகளுக்குள் சீரமைக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதியில் சீரமைப்புச் செய்தவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

பல மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு செயற்திறமாக பங்களிக்குமாறு ஜனாதிபதி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து அரச பொறிமுறையை வினைத்திறனாக பயன்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்வதற்கு மாவட்டக் குழுத் தலைவர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு அமைச்சர்கள் அல்லாத இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பது அவர்களது முழு நேரத்தையும் அதற்காக செலவிடுவதற்காகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல மாவட்டங்களுக்கு பொதுவான மற்றும் அந்த மாவட்டங்களுக்கு மட்டுமே குறிப்பான பிரச்சினைகளை அரசு கண்டறிந்துள்ளது. குடிதண்ணீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகள் நீர்ப்பாசன சீரமைப்பு, காட்டு யானைகள் கிராமங்களுக்கு வருதல், கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் உள்ள குறைபாடுகளை துரிதமாக நிறைவேற்றுவது அரசின் முக்கிய நோக்கமாகும்.

அதனை நிறைவேற்றுவதற்காக அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் நியமனங்களை வழங்கும்போது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களையும் நியமித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களினதும் நிலமையினை மீளாய்வு செய்வதற்கும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு வரை அரசு நடைமுறைப்படுத்திய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் சிலவற்றின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தில் நிதியை ஒதுக்கீடு செய்து இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திப் பணிகளினதும் வேலைகளை நிறைவு செய்ய வேண்டுமென்றும் பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

ஏ.பி.சி.டி என வகைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் அனைத்து வீதிகளையும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் காப்பட் செய்து அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் அதிகாரிகளுடன் சம்பந்தபபட்டு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அரசியல்வாதிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதி, குழு தலைவர்களிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி எதிர்பார்க்கும் ஒத்துழைப்பை வழங்கி, நாட்டை முன்னேற்றுவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்ஆர்.ஆட்டிகல, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர் -என்றுள்ளது.