கிளிநொச்சியில் அரிய வகை பழமரம்! அதிசயிக்கும் கிராம வாசிகள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியிலேயே குறித்த வெள்ளை இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தனது காணியில் உள்ள தோட்டக் கிணற்றை துப்பரவு செய்யும் பணியின் போது குறித்த நாவல் மரத்தின் பழங்கள் வித்தியாசமாக இருப்பதனை அவதானித்த அவர் அதனை பிடுங்கி உண்ட போது அவை நன்கு பழுத்த நாவல் பழங்களாக காணப்பட்டுள்ளன.

நாவல் மரம் அதன் தோற்றம் என்பன வழமையான நாவல் மரம் போன்றே காணப்படுகின்றன. காய்களும் வழமையான நாவல் காய்கள் போன்றே உள்ளன.

ஆனால் பழம் மாத்திரம் வெள்ளை நிறமாக அதாவது நெல்லிக்காய் நிறத்தில் காணப்படுகின்றன. பழத்தின் சுவையும் வழமையான பழத்திலிருந்து வேறுபடுகிறது.

குறித்த பிரதேசத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் சுண்டிக்குளம் பறவைகள் சரணலாயம் காணப்படுகிறது.

குறித்த பறவைகள் சரணலாயத்திற்கு அவ்வவ்போது பருவகால பறவைகள் வந்துபோவது வழமை.

அங்கு வருகின்ற பருவகால பறவைகள் சில உழவனூர் கிராமத்தில், இவரது காணியின் அருகில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்திற்குள் காணப்படும் மரங்களில் இரவில் தங்குவது வழமை.

எனவே அவ்வாறு வருகை தந்த பருவகால பறவைகளின் எச்சங்களால் குறித்த வெள்ளை இன நாவல் இங்கு உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவ்வகை மரங்கள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படுகின்றது என கூறப்படுகிறது.

வழமையான நாவல் பழத்தில் காணப்படும் மருத்துவ குணங்களை விட இதில் அதிகளவான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.