கடன் வழங்குதல் தொடர்பில் அரச வங்கிகளுக்கு மகிந்த விடுத்துள்ள உத்தரவு

கடன் வழங்கும் போது இலகு கொள்கையை பின்பற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல அரச வங்கிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் போது ஏற்படும் சிரமம் மற்றும் புதிதாக கடன் பெற்றுக் கொள்ள வங்கிகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் பிரதமர் அதிகாரிகளை கேட்டுள்ளார்.

நிதியமைச்சின் மீளாய்வு கூட்டத்தின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இலங்கை கடன் தகவல் பணியகத்தின் தரவுகளை பரிசீலிக்கும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கவனத்தை ஈர்க்கச் செய்தார்.

கடன்களை செலுத்தாத ஒருவருக்கு பிணையாளராக இருந்தமைக்காக இலங்கை கடன் தகவல் பணியகம் எனப்படும் கிரீப்பில் பெயர் அடங்குவதால் கடனை பெற்றுக் கொள்ள அந்நபர் தகுதியற்றவராக கருதப்படுவது போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பொருத்தமான நடவடிக்கையை பின்பற்றுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த அரசாங்கம் சமுர்த்தி உதவி வழங்கும் போது கட்சி ஆதரவாளர்களுக்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அதுபற்றி கண்டறிந்து அரசியல் பேதமின்றி சமுர்த்தி உதவி பெற்று கொடுக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் வளமான கிராமம் திட்டத்துக்கு 28 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு 2 மில்லியன் ரூபா வீதம் வழங்கப்படும்.