நீராடச் சென்ற நடிகை பரிதாபமாகப் பலி!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான கண்டி புப்புரஸ்ஸ பகுதியை சேர்ந்த துஷானி சில்வா என தெரியவந்துள்ளது.

அத்துடன், இவர் தொலைக்காட்சி ஒன்றின் நாடக நடிகை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து தனது குடும்பத்துடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது, நீராடச் சென்ற இவர் அந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இவர் நீரில் முழ்கி காணாமல் போயுள்ள நிலையில், குடும்ப உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடியுள்ளதை தொடர்ந்து இவரின் சடலம் நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறு தூரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதியின் சடலம் கிதுல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.