கிளிநொச்சியில் 15 வயதான மாணவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டி, உயிரை மாய்த்துக் கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கடந்த மாதம் 15ஆம் திகதி அவர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டினார்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (10) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி இந்துபுரத்தை சேர்ந்த யுவதியின் குடும்பம் தற்போது, சாந்தபுரத்தில் வசித்து வருகிறார்கள். இன்று அவரது இறுதிச் சடங்கு இடம்பெற்றது.
யுவதியின் தற்கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினம் யுவதியின் வீட்டில் நடந்த சர்ச்சையொன்றையடுத்தே அவர் உயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“குறிப்பிட்ட யுவதி சம்பவதினம் மேலதிக கல்வி வகுப்பிற்கு சென்றிருந்தார். இரவு 8 மணிக்கு வகுப்பு முடிந்ததன் பின்னர் தனது காதலனென அறியப்படும் இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து கிளம்பினார்.
ஆட்களற்ற பிரதேசமொன்றில் இருவரும் நின்றபோது, அந்த பகுதி விழிப்புகுழுவினர் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதன்போது, அங்கு கைகலப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.
காதலர்கள் என சொல்லப்படுபவர்களை விழிப்பு குழுவினர் கண்டித்துள்ளனர். தாக்கப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளனர்.
இரவு 9 மணியளவிலேயே அவர்கள் வீடு வந்துள்ளனர்.
விழிப்பு குழுவினர் யுவதியின் வீட்டிற்கு வந்து தாயாரிடம் கண்டித்துள்ளனர். தந்தையாரை இழந்த யுவதி, தாயார், பெரிய தாயாருடனேயே வளர்ந்துள்ளார்.
இதன்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் எல்லைமீறி திட்டிதாக கூறுகிறார்கள். இதன்போது, யுவதியியை அவரது தாயார், பெரிய தாயார் தாக்கியதாக கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி இடையிடையே நினைவு திரும்பியபோது, தன்னை பார்க்க வந்த சிலரிடம் இதனை தெரிவித்துள்ளார் என்றார்.
எனினும், விழிப்பு குழு தரப்பில் பேசியவர்கள் ஆபாசமாக திட்டியதாக கூறப்பட்டதை மறுத்துள்ளனர்.
“யுவதியின் வீட்டிற்கு சென்று கண்டித்தது உண்மை. படிக்கும் மாணவியென்ற அடிப்படையில், அவரது தவறான நடவடிக்கையை பெற்றோரிடம் தெரியப்படுத்தினோம். பெற்றோரால் அவர் தாக்கப்பட்டாரா என்பது எமக்கு தெரியாது என்றனர்.