வைத்தியர் சத்தியமூர்த்திக்கு அமைச்சர் டக்ளஸ் கொடுத்துள்ள உறுதிமொழி

யாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்திருந்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தலைமையிலான பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்துள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதிக வள பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலை தற்போது பல வைத்திய சேவை பிரிவுகள் விரிவாக்கம் கண்டுவரும் நிலையில் அதற்கான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஊழியர்களின் பற்றாக்கறை அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டியதுடன் அதற்கான தீர்வு அவசியமானது என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

வைத்தியர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

யாழ் போதனா வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சருடன் தாம் சந்திப்பொன்றை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததுடன் அதனூடாக வைத்தியசாலையின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வைத்தியர் பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.