இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டு தம்பதிகள் செய்த காரியம்… இறுதியில் நிகழ்ந்த பாரிய சோகம்

ஆந்திர பிரதேச மாநிலம், யனமலகுடுறு (Yanamalakuduru) என்னும் பகுதியை சேர்ந்த தம்பதியர் காமேஸ்வர் (Kameswar) மற்றும் பார்கவி (Bargavi).

படமட்டா (Patamata) என்னும் பகுதியில் மற்ற சிலருடன் சேர்ந்த அந்த தம்பதியர் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். தங்களது தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக, பிசினஸ் கூட்டாளிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது கடன் தொல்லையில் இருந்து மீள வேண்டி, பார்கவியின் கிட்னி ஒன்றை விற்க முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கிட்னி விற்பனை செய்ய வேண்டி, இணையதளங்களில் ஆட்களை தேடியுள்ளனர். அப்போது, டெல்லி பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் பெயர் அவர்களது கண்ணில் பட்டுள்ளது. அதன்மூலம், சோப்ரா சிங் என்று தன்னை அறிமுகம் செய்த நபர் ஒருவர், ஒரு கிட்னிக்கு 2 கோடி ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளார். ஒரு கிட்னிக்கு அதிக பணம் கிடைக்கும் என்பதால் பார்கவி மற்றும் காமேஸ்வர் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, சோப்ரா சிங் முதலில் கொஞ்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும், அனைத்தும் முடிந்த பின் பணத்தை திரும்ப பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய தம்பதி, மொத்தமாக 17 லட்ச ரூபாயை 24 தடவையாக சோப்ரா கூறிய வங்கி கணக்கில் அனுப்பி வைத்துள்ளனர். 2 கோடி கிடைக்கும் என்பதால் இந்த 17 லட்சத்தையே அந்த தம்பதியர் கடன் வாங்கி தான் அனுப்பி வைத்துள்ளனர்.

சோப்ராவிடம் 2 கோடி ரூபாய் கேட்ட போது, அந்த நபர் மீண்டும் 5 லட்ச ரூபாய் கேட்டதாக தெரிகிறது. அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை இருவரும் உணர்ந்து கொண்டனர். இது தொடர்பாக, போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். 2 கோடி ரூபாய் தருவதாக கூறி, 17 லட்சம் ருபாய் மோசடி செய்த அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.