உடனடியாக நிறுத்துங்கள் -யாழில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர்

யாழ் மாவட்டசந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் விவசாய அமைச்சர் தலைமையில் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது விவசாயிகளால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்று விவசாய பொருட்களை விற்பனை செய்யும் போது சந்தைகளில் 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை நிறுத்துமாறு கோரிக்கை விடப்பட்டது உடனடியாக அந்த கழிவு பணம் பெறும் நடவடிக்கையினை இடை நிறுத்துமாறு வடக்கு ஆளுநர் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளரை அமைச்சர் பணித்ததோடு அவ்வாறு நிறுத்த தவறினால் பொலிசார் மூலம் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அத்தோடு இலங்கை பூராகவும் உள்ள கமநல சேவை அமைப்புகளுக்கான களஞ்சியம் அடுத்த வருட பாதீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி தரப்படும் எனவும் அத்தோடு வடக்கில் கமநல சேவைகள் திணைக்களத்திற்குரிய தலைமை காரியாலய கட்டடத்திற்கு அடுத்த பட்ஜெட் மூலம் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் எனினும் மிக விரைவில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து புதிய கட்டட வேலைத்திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் உத்தரவிட்டார்

குறித்த கூட்டத்தின் போது விவசாய அமைப்பு பிரதிநிதிகளால் கட்டாக்காலி மாடுகள், கட்டாக்காலி நாய்கள் குரங்கு மற்றும் பன்றி களின் தொல்லை தொடர்பான பிரச்சனை அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் குறிப்பாக யானை பாதிப்பு தொடர்பில் பொதுவான பிரச்சினை காணப்படுகின்றது. எனினும் இந்த முறை எமது அரசாங்கம் அதற்கு தனியான ஒரு அமைச்சினை உருவாக்கி உள்ளது. அதே போல காட்டு விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுகின்றது அதற்கு ஓரிரு மாதங்களில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என தெரிவித்தார்

அத்தோடு வடக்கில் நெல் களஞ்சியம் இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள உணவு களஞ்சியத்தை உடனடியாக நெல் களஞ்சியத்துக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சர் அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டதோடு விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்ட தோடு அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைச்சினால் உரிய தீர்வுகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன

விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்‌ஷ, டி.பி. ஹேரத் மற்றும் மொஹான் டி சில்வா,

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும்,

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், வட மாகாண ஆளுநர் சாள்ஸ்,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது