சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் , விநியோகிக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு

ஸ்ரீலங்காவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

தற்போது மெட்ரோ பொலிட்டன் கம்பனியே சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடுகின்றது.

மேற்படி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மீது கணக்காய்வு திணைக்களம் நடத்திய விசாரணையில் மில்லியன் கணக்கான பாரிய இழப்பு நாட்டுக்கு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இந்நிறுவனம் ஒரு சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு தலா 1000 ரூபாவை அறவிடும் அதேவேளை மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட 75,000 சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுகின்றது.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் மெட்ரோ பொலிட்டன் கம்பனியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது.

எனவே எதிர்வரும் 2021ஆம் ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை நியாயமான செலவில் அச்சிடும் பணியை இராணுவத்தினரை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.