எதிர்வரும் முதலாம் திகதி முதல் புதிய நடைமுறை!

இலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதியில் இருந்து மீற்றர் பொருத்துவதனை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கை 2017ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. எனினும், சாரதிகள் 6 மாதங்களின் பின்னர் பொருத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.அந்த 6 மாத சந்தர்ப்பம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் ஒரு மாத கால சந்தர்ப்பம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும் என கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.தற்போது நாடு முழுவதும் 11,50,000 முச்சக்கரவண்டிகள் பயணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.