காதலனின் பிறந்தநாள் அன்று மதுபோதையில் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி!

காதலனின் பிறந்தநாளில் மதுபோதையில் நினைவிழந்த நிலையில் க.பொ.த உயர்தர மாணவியொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

காலி கோட்டையில் மாணவி சுயநினைவிழந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலி கோட்டை சுற்றுலா பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, காலி கோட்டையில் யுவதியொருவர் தரையில் படுத்திருந்ததை அவதானித்தனர். இளைஞர் ஒருவரும் அங்கு நின்றிருந்தார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் க.பொ.த உயர்தர மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்கள் காதலர்கள் என்பதும், மாணவனின் பிறந்த தினத்தை முன்னிட்டு யுவதி மது அருந்தியது தெரிய வந்தது.

தனியார் கல்வி நிலையத்திற்கு செலுத்துவதற்கென வீட்டில் மாணவன் 1,000 ரூபா பணம் பெற்றிருக்கிறார். அந்த பணத்தில் உள்நாட்டு மதுபானப் போத்தலொன்று வாங்கியுள்ளனர்.

அதில் அரைவாசியை அருந்திய மாணவி போதையில் நினைவு தவறி கீழே விழுந்துள்ளார். மாணவன் தான் மது அருந்தவில்லையென தெரிவித்திருந்தார்.

உடனடியாக நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு மாணவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதலர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டனர்.