அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி -யாழ்.விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள நஷ்டஈடு

யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் ஏற்பட்ட விவசாய அழிவுக்கான இழப்பீடு வழங்க 5 மாதங்களின் பின்னர் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா சமர்ப்பித்த அமைச்சரவைப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் சுமார் 500 ஏக்கர் வரையில் அழிவடைந்திருந்தன.

அப்போதைய கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்ட அழிவுகளுக்கு அரசாங்கதினால் நஸ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்ததுடன், அழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரை அறிவுறுத்தியிருந்ததுடன் அதுதொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இருப்பினும், பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் அழிவடைகின்ற போது நஸ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் விவசாய அமைச்சிடமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமோ இல்லாத நிலையில் நஸ்டஈடு வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக குறித்த அழிவுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குதவற்கு ஜனாதிபதி உறுதிளித்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அம்பன் புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நஸ்டஈடு வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.