யாழ் பல்கலைகழகத்தில் தென்னிலங்கை மாணவர்களால் தென்னிலங்கை மாணவர்கள் மீது பகிடிவதை

யாழ்ப்பாண பல்கலைகழக புதுமுக மாணவர்களிடம் தகாத படங்களை கேட்டு, இணையவழியாக நடக்கும் பகிடிவதை விவகாரம் தெற்கில் அதிர்வலைகளை எடுத்துள்ளது.

யாழ் பல்கலைகழகத்திற்கு தெரிவாகும் 170க்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்களிற்கு சிரேஸ்ர சிங்கள மாணவர்கள் பகிடிவதை செய்வதாக கூறப்படுகிறது.

வைபர், வட்ஸ்அப், பேஸ்புக் வழியாக தகாத படங்களை அனுப்ப கோருவதுடன், நேரலையில் கடுமையாக துன்புறுத்தப் படுவதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

பல்கலைகழகத்திற்குள் பகிடிவதை மற்றும் புதுமுக மாணர்களை கூட்டமாக கூட்டுவதில் சிக்கலிருப்பதால், புதுமுக சிங்கள மாணவர்கள் இம்மாதம் 11ஆம் திகதி யாழ்ப்பாணம் நாக விகாரைக்க அழைக்கப்பட்டு, அவர்கள் பல்கலைகழகத்திற்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மூத்த மாணவர்களை எவ்வாறு அனுசரித்து செல்ல வேண்டும் என்பது குறித்து மூத்த மாணவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்போது, புதுமுக மாணவர்களிடம் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் பெறப்பட்டன.

12,13ஆம் திகதிகளிலேயே இணைய வழி பகிடிவதை நடைபெற்றுள்ளது. பல மாணவிகளிடம், மூத்த மாணவர்கள் கடுமையாக துன்புறுத்தியுள்ளனர்.

அத்துடன், மூத்த மாணவர்களிற்கு தினமும் தொலைபேசி அழைப்பேற்படுத்தி மணிக்கணக்காக தொலைபேசி உரையாடலை புதிய மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.