அரச காணிகளில் குடியிருப்போருக்கு ஆவணங்களை வழங்குவது குறித்த வர்த்தமானி ரத்து

ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2192/36 என்ற இலக்கமுடைய அந்த வர்த்தமானி அறிவிப்பை பின்வாங்குவதாக காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹெரத், இரத்துச் செய்வதாக மற்றொரு அதுசிறப்பு வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் கடந்த 10ஆம் திகதி வெளியிடப்பட்டது.

விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி (2020/09/30) வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான காணிக் கச்சேரி 2020.11.01 ஆம் திகதியில் இருந்து 2020.11.21ஆம் திகதிக்கிடையில் இயைபுடைய பிரதேச செயலாளர் தீர்மானிக்கின்ற திகதியில் நடத்தப்படும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.