2 மகள்களுக்கும் விஷத்தை தந்து.. தண்டவாளத்தில் கிடந்த கவிதாவின் சடலம்..!

ரயில்வே கேட் தண்டவாளத்தில் கவிதாவின் சடலம் விழுந்து கிடந்ததை கண்டு விழுப்புரம் மக்கள் அலறிவிட்டனர்.. பெற்ற மகளுடன் தற்கொலை செய்து கொண்ட கவிதாவின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன்.. 40 வயதாகிறது.. கட்டுமான தொழிலாளி… இவரது மனைவி கவிதா.. 35 வயதாகிறது.. இவர்களுக்கு பவித்ரா என்ற 17 வயது மகளும், சர்மிளா என்ற 13 வயது மகளும் உள்ளனர்.

கஜேந்திரனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருக்கிறது.. ஒருகட்டத்தில் மதுவுக்கு அடிமையும் ஆகிவிட்டார்.. இதனால் கவிதாவுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு கொண்டே இருந்தார். வேலைக்கும் செல்வதில்லை.. குடும்பமும் வறுமையில் சிக்கி கொண்டது..

இதனால், கவிதா கடனை வாங்கிதான் குடும்பம் நடத்தினார்.. ஒருகட்டத்தில் வாங்கிய கடனையும்திருப்பி தர முடியாமல் தவித்தார். கணவரின் கொடுமை ஒரு பக்கம், கடன் தொல்லை ஒரு பக்கம் நெருக்கி தள்ளி, 2 மகள்களுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, கோயிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கவிதா 2 மகள்களையும் அழைத்து கொண்டு வெளியே சென்றார்.. ஆனால், வீட்டுக்கு ரொம்ப நேரமாகியும் திரும்பவே இல்லை.. இதனால் பதறி போன உறவினர்கள் பல இடங்களில் அவர்களை தேடி அலைந்தனர்.

இறுதியில், அதேபகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே இன்று காலை, கவிதாவும், மகள்கள் 2 பேர் என மொத்தமாக விழுந்து கிடந்தனர்.. அவர்களது வாயில் நுரை தள்ளி இருந்தது.. 3 பேருமே விஷம் சாப்பிட்டுள்ளனர்..

இதுகுறித்து தகவலறிந்து விழுப்புரம் நகர போலீஸார் நேரில் சென்று 3 பேரையும் மீட்க முயன்றனர்.. அதில், இளைய மகள் ஷர்மிளாவுக்கு மட்டும் உயிர் இருந்தது..

இதையடுத்து, அவரை விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு ஷர்மிளாவுக்கு தற்போது தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது