நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி பயின்ற டெஸ்போட் தோட்டத்தின் கீழ் பிரிவை சேர்ந்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் தாய் பொலிஸாரிடம் குறிப்பிடுகையில், மகள் நேற்றிரவு 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து பார்க்கும் போது மகளை காணவில்லை. இதனையடுத்து அவரை தேட ஆரம்பித்தோம் என கூறியுள்ளார்.
இன்று காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து பறிக்க சென்று கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா சடலமாக கிடப்பதை கண்டு அறிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்ட பின், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.