அறுவை சிகிச்சையில் குழந்தை மரணம்: தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்!

தான் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் போது 7 வயது சிறுமி பலியானதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து மருத்துவர் அனூப் கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ஓர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள அனூப் ஆர்த்தோ சிகிச்சைக்கான மருத்துவமனையின் மருத்துவர் அனூப் கிருஷ்ணன் தனது கையின் நரம்பை துண்டித்து தற்கொலை செய்து கொண்டார்.

புத்தூரைச் சேர்ந்த அபியா எஸ் லஷ்மி என்ற சிறுமி அனூப் ஆர்த்தோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.

இது குறித்து பெற்றோர் அளித்த புகாரில், செப்டம்பர் 23-ம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு சிறுமியை பெற்றோர் பார்க்க அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அனூப் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடனடியாக சிறுமியை வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் சிறுமி இறந்ததாக மருத்துவமனை முன்பு, சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று மருத்துவர் அனூப் கிருஷ்ணன் தனது கையின் நரம்பை துண்டித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.