28 வருடங்களின் பின்னர் வலி வடக்கு மக்களுக்கு விடிவு!! தமது சொந்த இடங்களை கண்ணீருடன் பார்வையிட்ட மக்கள்!!

28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.
28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினால், வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியாக மாறியது.

பின்னர் இந்த பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 28 வருடங்களாக வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனா்.
இந்த நிலையில் 40 இற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் பல இடா்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 683 ஏக்கர் காணி இன்றையதினம்(13-04-2018) விடுவிக்கப்பட்டது.இந்நிலையில், நீண்டகாலத்தின் பின் காடுகளாக மாறி கிடக்கும் தங்கள் சொந்த நிலத்தை வலி வடக்கு மக்கள்ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.